சென்னை: 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் 2வது அலையாக உருவெடுத்து, வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்ட மிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வாட்ஸ் அப்பில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள், வினாத்தாள்களைப் பார்த்து விடையை தனி தாளில் எழுதி பெற்றோர் கையொப்பம் பெற வேண்டும். விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்க்கூடாது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.