டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என தெரிகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களுடன் அவர்களது அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு வாரத்துக்கு முன்பு பிரதமர் மோடி கூட்டங்கள் நடத்தினார்.
மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டங்கள் பலவற்றில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் சபையில் மாற்றம், விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் நடக்கும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும் கொரோனா தடுப்புப் பணிகள், செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.