சென்னை: நீர்நீலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டப்படுகிறது. இந்த கட்டுமானத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்  வி.கார்த்திகேயன், இந்த ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு, ரயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் பி.டி.ராம்குமார் ஆஜராகி, நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர்நீலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும்.  உயர்நீதிமன்றத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே துறை வளர்ச்சிப் பணிகளுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்தத்தை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளாகவே உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக நீர் வளங்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது, நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு, தென்னக ரயில்வே 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.