சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நீட் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான கொள்கை. நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வரும் வழக்கை பொறுத்து நீட் விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்கும். மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது. நீர் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்னம் வரக்கூடாது என்பதற்காகவே நீட் பயிற்சி அளித்துவருகிறோம்” என தெரிவித்தார்.