டெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியதாக ஏஎன்ஐ டிவிட்டரில் கூறுகையில் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தினவிழாவில் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்காது. தமிழக ஊர்தி பங்கேற்காதது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது
தமிழக ஊர்தி இடம்பெறாதது
குறித்த காரணங்களை மாநில அரசிடம் தெரிவித்துவிட்டோம். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாடு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது.
மாநில அரசின் ஊர்தி
அதே போல் மேற்கு வங்க மாநில அரசின் ஊர்தியும் பங்கேற்காது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அது போல் கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழாவில் 25 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
அலங்கார ஊர்தி
ஆனால் இந்த முறை 5000 முதல் 8000 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகிறது. பார்வையாளர்களின் பெயர் பட்டியலை இன்னமும் இறுதி செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பின் போது தமிழக அலங்கார ஊர்தியை நேற்றைய தினம் மத்திய அரசு நிராகரித்தது.
சர்வதேச தலைவர்கள்
தமிழக அரசின் அலங்கார ஊர்தி மாதிரியில் வஉசி, வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரில் பாரதியாரை தவிர மற்றவர்கள் பிரபலமானவர்கள் அல்ல என்றும் இந்திய அளவில் பிரபலமானவர்களின் புகைப்படங்களை மட்டுமே சர்வதேச தலைவர்களுக்கு தெரியும் என கூறி நிராகரிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்து ட்வீட் போட்டிருந்த நிலையில் மத்திய அரசு நிராகரித்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின்
அது போல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் தங்கள் மாநில அலங்கார ஊர்தி இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோரின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தென்னிந்தியாவில் கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.