சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மருத்துவம், வருவாய், பொதுத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, ஊரடங்கை 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதலமைச்சர் அறிவித்தார்.